Oct 16, 2011

முதிர் கண்ணி...

மணமகன் புகைப்படங்களோடு


வந்துபோய்க் கொண்டிருந்த

தரகர் வருவதில்லை

அண்மைக்காலமாய்..



என்ன வந்ததென்று

அம்மா கேட்க

பதில் சொல்லாத

அப்பாவின் மௌனம்

கனத்துப் பரவிக்கிடக்கிறது

வீடெங்கும்...



அலமாரியில் மடித்துக்

கிடக்கும்

ஜாதக நோட்டில்

கரையான்கள் குடியேறும்

அறிகுறிகள் தெரிகின்றன...



கனத்த பொதியின்

பாரம் சுமக்கமுடியாது

நத்தைபோல் மெல்ல

நகரும் என்வீட்டில்

ஒரு அறையில்



நான்மட்டும்

தினம் முன்னிரவில்

மனம்பெண்ணாய்

அலங்கரிக்கப்பட்டு

அதிகாலைகளில்

விதவையாகிக் கொண்டிருக்கிறேன்

No comments: