இலங்கை
கடல்கள் சூழ்ந்த
உலகத்தின் அழகுத் தீவு..
அது
நான்கு பக்கம் கடலாலும்
நடுவில்
தமிழர்கள் ரத்தத்தாலும்
சூழப்பட்டிருக்கும்...
சீறிப்பாயும் சிங்களத்
தோட்டாக்கள்
சிதறடிக்கும்
தமிழன் வாழ்வை
தினம்..
இவர்களை
இனவெறி
விரட்டியது
உலகத்தின் கடை கோடிவரை...
அணுக்கருக்களை
அடைகாத்து சுமந்து வரும்
விமானப் பறவைகள்
வீசிசெல்லும் அவற்றை
தமிழர் தெருக்களில்...
வெந்து கருகி
வெளியேறும் தமிழினம்...
ராவணன் முதல்
ராஜபக்க்ஷே வரை
ஆட்சிகள் பலகண்டது
இலங்கை ஆனால்
அமைதி இல்லை அங்கே..
மீன்களின் கண்ணீர்
மட்டுமல்ல
ஈழத் தமிழர் கண்ணீரும்
கடல் எல்லை தாண்டியதே இல்லை..
அன்று அனுமன்
எரித்த இலங்கை
இன்றும் எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...
உங்களுக்காக
கண்ணீர் சிந்த உறவுகள்
இங்கே ஆறு கோடிகள்
ஆனால் அவர்களுக்கு
தலைவர்களாய்
சில கேடிகள்...
எட்டாத இடங்களில்
அரிக்கும் பொழுது மட்டுமே
தேவைப்படும் குச்சியைபோல
ஓட்டுக்கு மட்டுமே
உங்கள் கண்ணீர்
தேவைப்படுகிறது..
உங்களுக்காக நடக்கும்
தினம் நூறு உண்ணாவிரதம்
ஆயிரம் போராட்டம்
இவையெல்லாம்
ஒரு உண்ணாவிரதம்
ஒரு போராட்டம்
என்று மாறும் நாளில்தான்
புள்ளியாய் புலப்படும்
தனி ஈழ வெளிச்சம்..
No comments:
Post a Comment