Sep 18, 2011

வேரறுந்த


மரத்தினைப் போல

வீழ்ந்து கிடக்கிறான் அவன்

பிணத்தினை

தின்ன வட்டமிடுகின்றன

கழுகுகள்...



குரல்வலை

முடிச்சில் தொக்கிநிற்கின்றது

நீதியின் குரல்

உறைந்த கண்களில்

ஒளிந்திருக்கிறது

ஏமாற்றத்தின் கறைகள்...



அநீதிக்கு துடித்த

இதயம் அமைதியின்

மடியில்

அக்கிரமத்திற்கு சுழன்ற

நாக்கு மௌனத்தின்

பிடியில்...



சாட்டை சுழற்றிய

கரங்கள் சக்தியின்றி

தரையில்

உண்மை தேடி நடந்த

கால்கள் உணர்வில்லா

நிலையில்...



கழுகுகளும் நரிகளும்

பெருச்சாளிகளும்

கொண்டாடுகின்றன

அவன் மரணத்தை..

தின்று களிக்கின்றன

அவன் உடலை...



செத்துக்கிடக்கும்

அவன் யாரெனக் கேட்டேன்

சொல்ல மறுத்தனர்

யாவரும்...

கேட்டேன்

மறுபடியும் மறுபடியும்

கடைசியாய் அது

நீதிதேவன் என்றது

சற்றே தொலைவில்

ரத்தக் கறையோடிருந்த

தராசு...

No comments: