வா
உன் கூரிய
கோடரியின் முனைகள்
குறிவைக்கட்டும் என்
நடு நெஞ்சை....
வைரம் பாய்ந்ததுதான்
என்தேகம் ஆனாலும்
வலிக்கப் போவதில்லை
உன் கோடரிக்கு...
மழை எடுத்துப் போகாமல்
நான் மறித்துவைத்த
மண் வளங்கள் எத்தனை...?
அளவெடுக்க முடியாமல்
நான் அள்ளிக் கொடுத்த
ஆக்ஜிசன் புதையல்கள்
எவ்வளவு...?
இலை கொடுத்தேன்
மலர் கொடுத்தேன்
காய் கொடுத்தேன்
கனி கொடுத்தேன்
இறுதி மிச்சம்
என் உயிர்தான்
வா தருகிறேன்...
உன்னால் உணர
முடியாது போனாலும்
எனக்கும்
உயிரும் வலியும்
உண்டென்பது தெரியுமா
நண்பனே உனக்கு....?
முடிந்தவரையில்
வீழ்த்திவிடு எனை
ஒரே வீச்சில்..
வலியில்லாத மரணமேனும்
நீ எனக்களித்த
வாழ்நாள் உபகாரமாக
இருக்கட்டும்...
வா நண்பனே..
No comments:
Post a Comment